For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" -இயக்குநர் அமீர்

11:17 AM Apr 10, 2024 IST | Web Editor
 என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும்  எனக்கும் எந்த தொடர்பும் இல்லை   இயக்குநர் அமீர்
Advertisement

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

Advertisement

2000 கோடி‌ ரூபாய் மதிப்பிலான 3500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும்,  சினிமா தயாரிப்பாளருமான  ஜாபர் சாதிக்கை கடந்த 9 ம் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.‌

அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும்  ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற திரைப்படத்திற்காக இயக்குநர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அதற்கான முன்பணமாக 28 லட்சம் ரூபாயை அமீர்,  ஜாபர் சாதிக்கிடமிருந்து பெற்றதும்,  இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள படம் எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2014 முதல் ஜாபர் சாதிக்கும்,  இயக்குநர் அமீரும்  நண்பர்களாக பழகி வந்த நிலையில்,  மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இயக்குநர் அமீர் உட்பட 3  நபர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.  அதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி  டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில்  இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன்  நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  மைலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு,  தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகம்,  சேத்துப்பட்டில் உள்ள அமீர் வீடு,  கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரில் ரகு என்பவரது வீடு,  அலுவலகம், கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையில் ஷேக் முகமத் நசீர் வீடு,  அடையாறில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர் அஜீஸ்  வீடு,  அலுவலகம், உட்பட 14 இடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 50 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  நேற்று காலை ஆரம்பித்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது.

இந்நிலையில்,  இது தொடர்பாக இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

என் வீடு,  அலுவலகத்தில் அமலாக்கத்துறை 11 மணி நேரம் சோதனை நடத்துயது. சோதனை யின் போது சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.  என்ன ஆவணங்கள் என்று அவர்கள் தான் சொல்வார்கள்.

எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என்றே தொடக்க காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.  சமூக வலைத்தளங்களில் என் மீது சுமத்தப்படும் எந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதை நிரூபிப்பேன்.  எப்போதும் என்னிடமிருந்து வரும் ஒரே வார்த்தை - இறைவன் மிகப்பெரியவன்.

உள்நோக்கத்துடன் சோதனை செய்தார்களா? என்பதை நான் உறுதியாக சொல்ல முடியாது.  ஒருநாள் நிச்சயம் இதுகுறித்து பேசுவேன்.  விசாரணை முழுமையாக முடிவடையாததால்,  அதைப்பற்றி பேசி மேலும் சிக்கலாக்கி கொள்ள கூடாது.  என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது மட்டும் உண்மை.  விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது.  ஆனால், விசாரணை நடத்துவதற்கு பின்னால் அழுத்தம் உள்ளதா? என எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement