“அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை...” - கோவையில் அண்ணாமலை பேச்சு
அரசியலில் தான் ஓய்வெடுத்ததே இல்லை என்றும், தன்னுடைய அம்மாவை பார்த்தே 2 மாதங்கள் ஆவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில், பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :
“மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தேர்தலில் நானே களத்தில் இறக்கப்பட்டிருக்கிறேன் . 400 எம்.பி.-க்களை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குவதற்கு அல்ல. இந்தியாவின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என்பது தெரியும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமாராக அமர்வார் என்று தெரிந்து நடக்கும் தேர்தல் இது.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு, அதனை எந்த வேட்பாளரால் பெற்றுத் தர முடியும் என்பதை யோசித்து பாருங்கள். கோவையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டது. உங்கள் தொகுதி பிரச்னைகளை மேலே கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. குறைந்தபட்சம் நான் சொல்லக்கூடியதை அவர்களிடம் கேட்டு, அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்ய வைப்பது என் கடமை.
வட அமெரிக்காவில் மக்கா சோளம் விலை குறைவு. எனவே வட அமெரிக்காவில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய வரியை குறைத்தால் விலை குறைவாகும். இது போன்று புரிந்துகொள்ள ஒரு நபர் வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க ஒருவர் தேவை. விவசாயம் செய்ய முடியாத சூழல் இங்கு உள்ளது.
தமிழகத்தில் பாஜக எம்.பி.-க்கள் இல்லாததால் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை. பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது. கம்யூனிஸ்ட் எம்.பி.-க்கள் கேள்வி கேட்பதில்லை. தற்போதுள்ள எம்.பி.-யை யாருமே பார்த்ததில்லை. ஆனால் அண்ணாமலையை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள்.
இதையும் படியுங்கள் : தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி!
அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை. என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன். இப்போது மாற்றம் இல்லை என்றால், எப்போதும் இல்லை என்பதற்காக உழைத்து கொன்டிருக்கிறேன். அமைச்சர் TRB ராஜா பணத்தோடு களத்தில் நிற்கிறார். இது உங்களுடைய தேர்தல். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சன்டையிட்டு பெற்றுத் தருவேன். கோவைக்கு வேலையை செய்து கொடுப்பதற்கு, வலிமையான மக்கள் பிரதிநிதி தேவை. உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் நான் இருப்பேன்.”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.