“இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை விரும்பவில்லை” - பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் பேட்டி!
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொடூர பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார்.
வினய் நர்வால் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து. அதன் பின்னர், தனது மனைவி ஹிமான்ஷியுடம் ஜம்மு - காஷ்மீருக்கு தேனிலவு சென்ற போது இத்துயரச் சம்பவம் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த வினய் நர்வாலின் உடலுக்கு ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று(மே.1) கர்னல் பகுதியில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது, உயிரிழந்தவரின் மனைவி ஹிமான்ஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “இஸ்லாமியர்கள் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு எதிரான போக்கை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக எங்களுக்கு நீதியும் வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.