“மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(மார்ச்.25) மாரடைப்பால் காலமாகியுள்ளார். இத்துயர சம்பவம் தமிழ்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறைப் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.