மனைவியை காதலனுடன் மணமுடித்து வைத்த கணவர் - தனது பாதுகாப்பிற்காக சேர்த்து வைத்ததாக பேட்டி!
உத்திர பிரதேசம் தங்க்தா அருகே உள்ள கட்டார் மிஸ்ரா கிராமத்தில் வசிக்கும் பப்லு என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகா அதே கிராமத்தைச் சேர்ந்த விஷால் என்பவருடன் ஒன்றரை வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் பப்லுவுக்குத் தெரியவந்ததும், அதை முடிவுக்குக் கொண்டுவருமாறு ராதிகாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்த சூழலில் பப்லு, நிலைமை மோசமாவதற்கு பதிலாக தனது மனைவிக்கும் விஷாலுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 24ஆம் தேதி ராதிகாவையும் விஷாலையும் தங்க்தா தெஹ்சிலுக்கு அழைத்துச் சென்ற பப்லு அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கிராம மக்கள் முன்னிலையில்கோவிலில் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அதன் பின்பு பப்லு செய்தியாளர்களிடம், “விஷாலும் ராதிகாவும் தொடர்பில் இருந்ததை பலமுறை பார்த்து, அதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அதற்கு ராதிகா ஒத்துவரவில்லை. அதனால், எனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். கொஞ்ச நாளாக மனைவிகள் கணவர்களை கொலை செய்வதை பார்த்து வருகிறேன்” என்று கூறியதோடு குழந்தைகளை தான் கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மீரட்டில் முஸ்கன் என்பவர் காதலன் சாஹிலுடன் சேர்ந்து தனது கணவர் சவுரப்பைக் கொலை செய்து அவரது உடலை ஒரு டிரம்மிற்குள் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஒரு வாரமாக அங்கு கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.