‘செத்துப்போ’ எனக்கூறிய கணவர்... மன விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... இணையத்தில் சீற்றத்தை தூண்டிய வீடியோ!
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டு, அந்த சம்பவத்தை தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இது இணையத்தில் பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், தனது மரணத்திற்கு கணவர் மற்றும் மாமியார் தன்னை மனரீதியாக சித்ரவதை செய்ததே காரணம் என தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு அம்ரீன் காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அம்ரீனுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்ரீனின் கணவர் வீட்டார் அவரை மனதளவில் காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். வீடியோவில் பேசிய அம்ரீன்,
“கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை. சில நேரங்களில் இதனை வைத்து குத்திக்காட்டி பேசுவார்கள். இல்லையெனில் எனது உணவுப்பழக்கம் குறித்து பேசுவார்கள். எனது கணவர் தங்கையும், என் மாமனார் ஷாஹித்தும் என் மரணத்திற்குக் காரணம். என் கணவருக்கும் என் மரணத்தில் பொறுப்புண்டு. அவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, ஒவ்வொரு முறையும் கருக்கலைந்ததற்கு நான்தான் காரணம் என நினைக்கிறார். அவரது தந்தையும், சகோதரியும் இதைப்பற்றி அவரிடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் எல்லோராலும் சலிப்படைந்துவிட்டேன், இனிமேல் என்னால் இவற்றையெல்லாம் தாங்க முடியாது” என்று அம்ரீன் கூறினார்.
மேலும், தனக்கு சிகிச்சையளித்து தவறு என்றும், சிகிச்சைக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தரவேண்டும் என அம்ரீனின் மாமியார் கூறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அம்ரீன், “எனக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கும்?. என் கணவர் பணக்காரராக இருந்தால், அவர் உங்களிடம் கடன் கேட்பாரா?. என்று கூறினார்.
தொடர்ந்து தனது மாமனார், மாமியார், கணவர், நாத்தனார், என அனைவரும் அம்ரீனின் இறப்பையே விரும்பியதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். “நீ ஏன் செத்துப் போக்ககூடாது” என்று என் கணவர் என்னிடம் கேட்டார். அவரது தந்தை மற்றும் சகோதரியும் அதையே கூறுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததாகவும், இதற்குமேல் இதையெல்லாம் தாங்கிகொள்ள முடியாது எனவும் தெரிவித்த அம்ரீன், “நான் இறந்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது இருப்பதை விட நான் நன்றாக இருப்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு வீடியோவில் பேசியுள்ளார்.
வீடியோவில் பேசியதை தொடர்ந்து அம்ரீன் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அம்ரீனின் தொலைபேசியில் இருந்து இந்த வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து அம்ரீனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.