“தமிழ்நாடு அரசு அறிவித்தபடி எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது?” - அறிக்கை தாக்கல் செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை அமைக்க தடை விதிக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மேகலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “ மதுரை கைத்தறி நகரில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வசித்து வருகின்றோம். மதுரை கீழக்குயில் குடியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை மாற்றி எங்கள் பகுதியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கடை திறக்கவுள்ள இடத்திற்கு மிக அருகாமையில் அரசு பள்ளி, வழிபாட்டுத்தளங்கள் உள்ளது இவ்வாறு உள்ள சூழலில் மது கடை திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
இந்த கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பாதிக்கப்படும் எனவே இந்த கடை திறக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக இந்த மனு மீதான விசாரணையில், இந்த பகுதியில் கடை திறக்க தடை விதித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் போதை மறுவாழ்வு மையங்கள் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் இந்த மனு மீது நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போதை மறுவாழ்வு மையம் நடைபெறுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் நீதிபதிகள், அரசு தரப்பில் அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மது கடைகள் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளது? போதை மறுவாழ்வு மையம் எத்தனை தொடங்கப்பட்டுள்ளது? அதில் எத்தனை நபர்கள் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்?எத்தனை நபர்கள் சிகிச்சை முடித்து வெளியே சென்றனர்? என்ற முழு விவரங்களை நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.