ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறது. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ரோகித் (13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளில் 8ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் மாலை மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவே புகார் தெரிவித்தனர்.
ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நேற்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை மீட்டுத்தரக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுவன் அஞ்செட்டி - ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து போலிசார் விசாரணையில் அதே ஊரை சேர்ந்த மாதேவன் (22) காதலியுடன் பேசி கொண்டிருந்ததை ரோகித் பார்த்ததால் இந்த தகவல் வெளியே தெரிந்துவிடக்கூடாது என நண்பரான மாதேவா(22) என்பவருடன் இணைந்து விளையாட சென்ற சிறுவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் கடத்தப்பட்ட காரில் பெண் இருந்ததாக சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில், காதல் விவகாரம் வெளியே தெரியாமல் மறைக்க இந்த கொலை நடந்தது என்பதால் கொலையாளி மாதேவன் என்பவரது காதலியிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.