கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு!
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா கடற்கரைக்கு அருகில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகரும் போது 24 மணி நேரத்திற்குள் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பத்தனம்திட்டா, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும், மறுநாள் (31-ம் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா தலங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்ட ஆட்சியர்கள், இரவு நேர பயணங்களுக்கும் தடை விதித்துள்ளனர். பத்தனம் திட்டாவில் வருகிற 1-ம் தேதி வரை மலைப்பகுதிகளுக்கு இரவு பயணம் செய்ய அனுமதி இல்லை. மூணாறு இடைவெளி சாலை மற்றும் நேரியமங்கலம் - அடிமாலி பகுதியில் நாளை (30-ம் தேதி) வரை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.