பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் பலத்த சூறவாளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பாகிஸ்தானின் லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கு மின்சார வினியோகம் தடைபட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.