உத்தரபிரதேசத்தில் கனமழை - இதுவரை 22 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் லக்னோ, பிரோசாபாத், சித்தார்த்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் (ஏப்ரல் 10) நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியதுடன் பல்வேறு இடங்களில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனிடையே பிரோசாபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் லலிதா தேவி (30 வயது) என்ற கர்ப்பிணிப் பெண்ணும், பதவ்வீர் சிங் (32 வயது) என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், சித்தார்த்நகரில் வேலைக்கு சென்ற தொழிலாளி கன்ஷ்யாம் (40 வயது) மின்னல் தாக்கி உயிரிழந்தார். மோச்குர்த் கிராமத்தில் ஹரிஷ்சந்திரா (25 வயது) என்பவர் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி இறந்தார்.
அதே நேரத்தில் சக்ரான் காவல் நிலையப்பகுதியில் உள்ள ரசூல்பூர் கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் குசுமா தேவி (55 வயது) என்பவர் உயிரிழந்தார். இது தவிர பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இதேபோல கான்பூர், காஷிபூர், கோண்டா, அமேதி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன. கனமழையினால் இரவு 11 மணி வரை மாநிலம் முழுவதும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து மழையின் காரணமாக வெள்ள பாதிப்புகள் அதிகம் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.