கனமழை எதிரொலி - திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, திருப்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.