For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

11:45 AM Oct 11, 2024 IST | Web Editor
கனமழை எச்சரிக்கை  மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
Advertisement

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாள முன்னெரிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் வரும் 15ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாள முன்னெரிச்சை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தமுறை வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மாதம் முழுவதுமே பரவலாக மழை இருக்கும். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதிவரை கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (சனிக்கிழமை) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் அக்டோபர் 14-ந்தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் 15ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement