#Chennai-ல் கடும் பனிமூட்டம்... ரயில், விமான சேவைகள் பாதிப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதகளில் சூழ்ந்த பனிமூட்டத்தினால் வாகன ஒட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் காலை 7 மணி வரையும் பனிப் பொழிந்ததால் வாகன ஓட்டிகளால் எதிரில் வரக்கூடிய வாகனங்களை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேலும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக சென்ற அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.