"வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்" - விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ‘ஜன நாயகன்’ படம்தான் கடைசி எனவும் அதன்பிறகு அவர் தீவிர அரசியலில் இறங்கப் போகதாகவும் சொல்லப்படுகிறது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
"நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
"புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.