“பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டிருக்கிறதா?” - இபிஎஸ் கேள்வி
காரில் சென்ற பெண்களை மறித்து சிலர் அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் ‘இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது’ என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர். பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட பறிக்கப்பட்டிருக்கிறதா?
மாநிலத்தின் பிரதான சாலையான ஈ.சி.ஆர்-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வழக்கில், நேர்மையாக வழக்குப் பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.