பூக்களால் மணக்கும் நல்லிணக்கம் : பூத்தட்டுகள் ஏந்தி சென்று முத்தாலம்மனை வழிப்பட்ட இஸ்லாமியர்கள்!
பரமக்குடி நகரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தின் 69ம் ஆண்டு
பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு, அம்மனுக்கு நகரின் 58 இடங்களில் பொதுமக்கள் சமுதாய அமைப்பினர் சார்பில் மல்லிகை, ரோஜா, தாமரை, உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பூக்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் மேளதாளத்துடன் நகர் முழுவதும் ஊர்வலமாக பூத்தட்டுகளை எடுத்துச்சென்று அம்மனுக்கு சமர்பித்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர் அமைப்பைச் சேர்ந்த தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளையினர், எமனேஸ்வரம் இஸ்லாமிய இளைஞர்கள் முத்தாலம்மனுக்கு பூத்தட்டுகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. மேலும் இஸ்லாமியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இச்சம்பவம் பரமக்குடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.