சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இந்திர விழாவை நமக்குக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.
வெயிலைக் கொடுக்கும் சித்திரை தான் இனி வரும் ஆண்டுகளில் நமக்கு வெற்றிகளையும் வழங்கப் போகிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையும் கூட. தமிழர்களின் வாழ்வில் வரப்போகும் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.
சித்திரை மாதத்தின் தொடக்கமான இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.
தமிழர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைகள் கிடைக்க சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து கூறுகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.