தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த ஏப்.29ம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த சூழலில் கடந்த மே 17ம் தேதி 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதன்படி, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்த தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அனுப்பப்பட்ட 18 மசோதாக்களில் 14 மசோதாக்கள் நிலுவையில் இருந்தனர். இந்த நிலையில், அதில் 2 மசோதாக்கலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.