மதுக்கரை பகுதியில் எரிந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியை உடல் கண்டெடுப்பு!
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நாச்சிபாளையத்தில் இன்று காலை எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய மதுக்கரை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எரிந்த நிலையில் கிடந்த பெண் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மனைவி பத்மா (53) என்பது தெரியவந்துள்ளது.
இவர் வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகள் ராஜராஜேஸ்வரி வழக்கறிஞர். மகன் லட்சுமி நாராயணன் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை எரிக்கும் இடத்தில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார்.
தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.