"அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு" - அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9 ஆயிரத்து 600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியிடப்பட்டன.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
தொகுதி 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காதது ஏன்?தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4)…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 10, 2025
அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.