துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
துபாயிலிருந்து திருச்சிக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!
வழக்கமாக விமான பயணிகளை வான் நுண்ணறிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவர் தனது மலக்குடலில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஆண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 1039 கிராம் எனவும் இதன் சந்தை மதிப்பு ரூ. 74,91,190 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.