தங்க சுரங்கம் சரிந்து விபத்து - 48 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி. இந்த நாட்டில் ஏராளமான தங்க சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சில சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள் : லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
இந்த நிலையில், மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கத்தில் 1,800 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சுரங்க விபத்தில் 48 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.