சூதாட்ட செயலி விளம்பரம் - நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!
தெலங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா என்பவர் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் மீது சைபராபாத் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதில், தான் வசிக்கும் தெருவில் உள்ள இளைஞரிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறு முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாகவும், இதில் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விதிகளை மீறி விளம்பரப்படுத்தும் நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்வதாகா கூறி குற்றம்சாட்டியுள்ளார்.
பனீந்திரா ஷர்மா அளித்த புகாரின் பேரில், சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.