இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!
இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவுக் குழுவின் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவிற்கு தலைமை தாங்கினார். ஆகஸ்ட் 27, 2003 அன்று அவர் பதவி விலகினார்.
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார், INSAT-2, IRS-1A/1B மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் இந்தியாவின் முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களான பாஸ்கரா I மற்றும் II ஆகியவற்றின் திட்ட இயக்குநராக இருந்த அவர், PSLV மற்றும் GSLV ஏவுதல்கள் போன்ற முக்கிய மைல்கற்களை மேற்பார்வையிட்டார். இஸ்ரோவில் அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கஸ்தூரி ரங்கன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். மாநிலங்களவை உறுப்பினராகவும் (2003–09), அப்போதைய இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.