பாஜகவில் ஐக்கியமானார் டெல்லி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி!
ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையேயான கூட்டணியை விமர்சித்து கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார்.
இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு அதில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த அரவிந்தர் சிங் லவ்லி திடீரென தனது பதவியை கடந்த 28-ஆம் தேதி (28.03.2024) ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பினார்.
அரவிந்தர் சிங் லவ்லி தனது கடிதத்தில் தெரிவித்ததாவது:
” காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த ஆம் ஆத்மி கட்சியுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த உண்மையை வடகிழக்கு டெல்லி வேட்பாளர் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை.” என அரவிந்த் சிங் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஒரு வாரத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார் அரவிந்தர் சிங் லவ்லி. ஏற்கனவே பாஜகவில் தலைவர்கள் இல்லாததால் பிற கட்சிகளில் உள்ளவர்களை கட்சித்தாவ வைத்து நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது என பல்வேறு கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில், தற்போது டெல்லி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணையும் நிகழ்வு நடந்தேரியுள்ளது.