முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
"மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025 சனிக் கிழமை வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் !
25.2.2025 முதல் 1.3.2025 வரை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின்… pic.twitter.com/ZHW1O452bR
— AIADMK - - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 15, 2025
மாவட்டக் கட்சிச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.