நெல்லை மழை வெள்ள பாதிப்பு - "தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளது" மத்தியகுழு பாராட்டு!
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், விளைநிலங்களுக்கு மழை நீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் உடைமைகள், விளைநிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனை மத்திய குழுவினர் கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள் : ஓசூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான மத்திய குழுவினர் இரண்டாவது முறையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய குழுவினர் திருநெல்வேலி மாவட்டம் கருப்பன் துறை பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கூட்டு குடிநீர் திட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருநெல்வேலியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கருப்பன் துறை பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மத்திய குழுவைச் சேர்ந்த அதிகாரி பாலாஜி கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளது" என கூறினார்.