மதுரை - அபுதாபி இடையேயான இண்டிகோ விமான சேவை இன்று தொடங்கியது!
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாவதாக மதுரையிலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் தனது பயண சேவையை துவங்கியுள்ளது.
இந்த விமானம் இன்று முதல் நாளாக அபுதாபியிலிருந்து பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. இதில் அபுதாபியிலிருந்து 134 பயணிகளும் மதுரை வந்தடைந்தனர். மீண்டும் மதுரையிலிருந்து பயணிகளுடன் நண்பகல் 2.48 மணிக்கு அபுதாபி புறப்பட்டு சென்றது. மதுரையிலிருந்து 174 பயணிகள் அபுதாபி புறப்பட்டு சென்றனர்.
மதுரையில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை இயக்கப்படும். பொதுவாக புதிய விமான சேவை துவங்கும் போது, விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால், வரவேற்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் அபுதாபிக்கான புதிய விமான சேவை மதுரை விமான நிலையத்தில் துவங்கியது.