பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து - 15 பேர் உயிரிழப்பு!
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 42 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எறிந்துள்ளது.
இந்த தீ விபத்தில் பேருந்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். மேலும் தீ மளமளவென பேருந்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். மேலும் எஞ்சிய பயணிகளில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயணிகள் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.