"சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்கத் தான் இப்படிப்பட்ட படங்கள்.." - இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு திரைப்படமும் எடுக்கும்போது அழுத்தம் வரவில்லை பொறுப்பு அதிகமாக இருக்கிறது. விளையாட்டு என்பது தனியாக கிடையாது சமூகம் சார்ந்த ஒரு நிகழ்வாகவே உள்ளது. தென் மாவட்ட இளைஞர்களுக்கு அதிகமான பாதைகள் உள்ளது அதில் பயணித்து உங்களது வாழ்க்கையில் உயருங்கள். உங்களுக்கு பலரும் உதவி செய்ய முன் வருவார்கள்.
ஜாதியை படமாக நான் எடுக்கவில்லை எனது வாழ்வில் கண்ட பிரச்சனைகளின் வழியே படமாக எடுக்கிறேன். சாதியை பற்றி தெளிவான புரிதல் உருவாக்க தான் இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுகிறது. சாதியை கடந்து வெளியே வந்து விடலாம் என்பதே இந்த படத்தில் கூறியுள்ளேன். நான் சாதிக்கு மதத்திற்கு எதிரானவன். அந்த முத்திரையின் மீது உள்ளது அதனையே எப்போதும் பிரதிபலிப்பேன். இதுவரை என்னால் எடுக்கப்பட்ட படங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி உள்ளது. பத்து பேர் உட்கார்ந்து பேசுவது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது அது சரியாக இருக்காது.
எதிர்மறை கருத்துக்கள் வரத்தான் செய்யும் அதனை எதிர்த்து சாகும் வரை எனது பயணம் இருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள பதட்டங்களை மாற்றுவதற்காக தான் இது போன்ற படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. எனது இயக்கத்தில் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கிறார். எனது வாழ்வில் வந்த பெண்களை மஞ்சனத்தி ஆக சித்தரித்து படம் எடுத்துள்ளேன் அதிகமான மஞ்சனத்தி பூக்கள் எனது வாழ்வில் உள்ளது இன்னமும் வரும் படங்களிலும் மஞ்சனத்தி பிரதிபலிக்கும். நான் கதை எழுதும் போது பெரிதான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றால் காதல் படங்கள் எனது மகள் விரும்புவது போல் குழந்தைகள் படம் என பலவும் எடுப்பேன்" என்றார்.