பக்ரீத் பண்டிகை - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும்
கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகயில் இஸ்லாமியர்கள் இன்று காலை தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
"பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
"இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் , தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளில், எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமியர்கள் அனைவருக்கும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"
தவெக தலைவர் விஜய்
"உன்னத தியாகத்தைப் போற்றும் வகையில், பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தைப் போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்"