“கூட்டாட்சி என்றாலே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் "கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
தூங்கா நகரம் இன்று சிவப்பு மாநகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதை பார்த்து முதல் ஆளாக மகிழ்ச்சி அடைகிறேன். திமுக கொடியில் மட்டுமல்ல எங்களில் பாதியும் நீங்கள் தான். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் கருத்தியல் நட்பு இருப்பதால் தான் இந்த மாநாட்டுக்கு நான் வந்துள்ளேன். தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என அடையாளப்படுத்தி கொண்டவர் கருணாநிதி.
கார்ல் மார்க்சுக்கு சிலை வைப்பதாக அறிவித்து விட்டு உங்களில் பாதியாக இங்கு வந்திருக்கும் என் பெயர் "ஸ்டாலின்". நமது பயணமும் பாதையும் மிக நீண்டது. 2019 முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். யாரை எதிர்க்க வேண்டும் என தீர்க்கமாக இயங்குகிறோம்.
இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என சிலர் நப்பாசையில் இருக்கிறார்கள்.
அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. இங்கு இருக்கிற யாரும் அதற்கு இடம் தர மாட்டோம். கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகி விட்டது. மத்திய அரசால் அதிகப் பாதிப்படைவது நானும், கேரள முதலமைச்சரும் தான். எனவே எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். எனக்கு பினராயி விஜயன் மூத்த சகோதரர்.
மாநில சுயாட்சி எங்கள் உயிர் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக மத்திய அரசு இருக்கிறது. நரேந்திர மோடியின் ஆட்சிதான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். மத்திய - மாநில அரசு உறவை மேம்படுத்த சர்க்காரியா, புஞ்சி கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என 2012ல் முதலமைச்சராக இருந்த மோடி கேட்டார். மூன்றாம் முறையாக பிரதமராக உள்ள மோடி அவர்களே, உங்கள் கோரிக்கை மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?.
ஜிஎஸ்டி மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு அனுமதி மறுப்பு; மத்திய அரசின் சார்பில் சிறப்பு திட்டங்கள் அளிக்கப்படுவதில்லை. பல்வேறு சட்டங்கள் மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. ஆளுநர்களை பாஜக தலைவர்களாக மாற்றி முழுநேர அரசியல் தலைவர்களாக வைத்துள்ளனர். பாஜகவுக்கு எதிரான மாநில அரசுகள் மிரட்டப்படுகின்றன. கட்சிகள் உடைக்கப்படுகின்றன. மாநிலங்களே இருக்கக் கூடாது என பாஜக அரசு நினைக்கிறது.
நாடாளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டுதான் இங்கு வந்துள்ளேன். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் நள்ளிரவில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அறிவித்துள்ளேன்.
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறது பாஜக அரசு. இதனை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதற்காக ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கி நான்கு முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு எதிரான, பாஜக ஆட்சி முடிவில்தான் இந்தியாவில் கூட்டாட்சி மலரும். அதை உருவாக்க இந்தியா முழுதும் உள்ள ஜனநாயக சக்திகளை திரட்டுவோம். இதற்காகத்தான் திமுக குரல் கொடுக்கிறது. இணைந்து போராடுவோம், பாசிசத்தை வீழ்த்துவோம்” எனப் பேசினார்.