தந்தை பெரியார் பிறந்த நாள் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து!
தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன”
என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியார் கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார். இதன் காரணமாக அவருக்கு வைக்கம் வீரர் என்ற பெயரும் உண்டு. மேலும் கடந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தி 100 ஆம் ஆண்டு நிறைவையொட்டி வைக்கம் நகரில் தந்தை பெரியாரின் நினைவகம் மற்றும் நூலகம் ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.