மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை - போலீசார் விசாரணை!
மதுரை மாநகர் முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (39), காயத்ரி (29) தம்பதியினர் யுவஸ்ரீ (10) கனிஷ்கா (5) என்ற இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். கோபிராஜ் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் (மீனாட்சிமிஷன்) மருத்துவமனையில் எலக்ட்ரீசனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவியிடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயத்ரியின் உறவினர்கள் கோபிராஜிடம் நேரில் வந்து பேசி சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி காயத்ரி தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் கோபிராஜ் தனது இரு மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.
நவம்பர் 30 ஆம் தேதி மூத்த மகள் யுவஸ்ரீக்கு பிறந்தநாள் என்பதால் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுள்ளதாக தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். இந் நிலையில் நேற்று பிள்ளைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் ஒயரை வைத்து கழுத்தை நெரித்து விட்டு குழந்தைகள் உயிரிழந்தவுடன் கோபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதன் அடுத்து நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது தந்தை மற்றும் இரு பிள்ளைகள் மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து கூடல்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கோபிராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பாக இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.