டெல்லியை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு - பாதுகாப்பை பலப்படுத்த போலீஸார் தீவிரம்!
டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக சம்யுக்தா கிஸான் மோர்ச்சா மற்றும் கிஸான் மஸ்தூர் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள போலீஸார் தயாராகி வருகின்றனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் வரும் பிப்.13 அன்று ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜன.26-ம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அம்மாநில தெருக்களில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் நடந்த மோதல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பேரணியை எதிர்கொள்ள டெல்லி போலீஸார் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றால் இந்தத் தடுப்புகளை நகர்த்த கிரேன்களும் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாமல் தடுக்கும் வகையில் ஹரியாணாவும் சிமெண்ட் தடுப்புகளை எல்லையில் வைத்துள்ளது. இதனிடையே பஞ்சாப் மற்றும் ஹரியாணா போலீஸார் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் போலி டிராக்டர் பேரணி ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியாணாவில் 10, பஞ்சாபில் 30 என மொத்தம் 40 டிராக்டர்கள் பேரணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் சுமார் 2,000 டிராக்டர்கள், 20,000 விவசாயிகளுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரலாம். அவர்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு கார், இரண்டு சக்கர வாகனங்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தலாம் என்றும், அவர்களில் பலர் பிரதமர், அமைச்சர்கள், பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன் கூடி போராட்டம் நடத்தலாம் என்றும், போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் ஈடுபடுத்தப்படாலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லிக்குள் நுழைய விடாமல் விவசாயிகளை எல்லையிலேயே தடுத்து நிறுத்த ஹரியாணா அரசும் தீவிரமாகி வருகிறது. பஞ்ச்குலாவில் 144 தடையுத்தரவு அமல்படுத்துவது, இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப தடைவிதிப்பது, எல்லைப்பகுதிகளில் சிமெண்ட் தடுப்புகள், தண்ணீர் பீச்சும் இயந்திரம், மணல்முட்டைகள் அடுக்குவது என தயாராகி வருகிறது. விவசாயிகளை தடுத்து நிறுத்த 50 துணைராணுவ படைப் பிரிவுகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.