131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட முக்கிய விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவம்பரில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் 131 நாட்களுக்கு பிறகு அந்த போராட்டத்தை ஜக்ஜித் சிங் தல்லேவால் முடித்துக்கொண்டுள்ளார். பஞ்சாபில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “நீங்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதத்தை முடிக்குமாறு என்னிடம் கேட்டுள்ளீர்கள். போராட்டத்தை கவனித்துக்கொண்டதற்கு நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்கள் உத்தரவை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறி உண்ணாவிர போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இதனிடையே மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயத் தலைவர் ஸ்ரீ ஜக்ஜித் சிங் தல்லேவால் தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து தற்போது உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. விவசாயிகள் மே 4 ஆம் தேதி, பிரதிநிதிகளைச் சந்திக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.