குடும்ப பிரச்சனை - 4 வயது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் நள்ளிரவு 1.30 மணிக்கு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தை மற்றும் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி (26), அவருடைய மகன் யாதேஸ்வரன் (4) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயலட்சுமிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண், குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.