விண்ணில் பாய்ந்த ‘பால்கன் 9’ ராக்கெட் - வரலாற்று சாதனை படைத்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸ்மின் -4 என்ற பெயரில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதில் இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸனீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் இந்த மனித விண்கல பயணத்திற்கான திட்ட இயக்குநர் பெக்கி விட்சன் தலைமையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருந்தனர்.
இதில் திட்ட இயக்குநரை தவிர்த்து மற்ற மூவரும் முதன்முறையாக விண்வெளிக்கு செல்கின்றனர். முன்னதாக இவர்களின் விண்வெளி பயணம் வானிலை ஆக்சிஜன் கசிவு, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல பிரச்னை காரணமாக தடைபட்டது. தொடர்ந்து இன்று(ஜூன்.25) மதியம் 90 % விண்வெளி பயணம் செய்ய ஏதுவான சூழல் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 12.01 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா, கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் கழித்தார்.