"குஜராத்தில் வசித்தாலும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை" - புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு, மதுரை பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி திடலில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருள்காட்சியில் ஜூன் 16 ஆம் தேதி மக்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை கோயில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் தரிசனம் செய்து
வருகிறார்கள். 4 ஆம் காலை நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் வழிபாடு நடத்தினார். அவருக்கு இந்து முன்னணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கைலாஷ்நாதன், "சிவனுக்கு மகன் எனும் புராணங்களை தாண்டி முருகன் ஒரு தமிழ்க் கடவுள். தமிழர் அதிகம் வழிபடும் கடவுள் முருகன். என்னுடைய குல தெய்வம் முருகன் தான், நான் ஒரு முருக பக்தன், முருகன் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட நம்பிக்கை உண்டு. மனதில் சிறு சிறு பயம் வரும் போது யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை மனதில் பதிந்தது. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை, தமிழ்நாட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு சென்றவர்கள் இன்னும் முருகனை மறக்காமல் வழிபட்டு வருகிறார்கள்.
குஜராத்தில் 45 ஆண்டுகள் பணி செய்தாலும், என் குல தெய்வமான முருகன் ஒரு நாளும் வழிபடாமல் இருந்ததில்லை. பண்பாட்டு ரீதியில் மக்கள் அனைவரும் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம். புதுச்சேரியில் இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவிலில் அனைவரும் வழிபட்டு வருகிறார்கள். புதுச்சேரி ஆன்மீக சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள், சித்த சமாதிகள் உள்ளது. பழமை வாய்ந்த கோயில்களுக்கு மக்களை வர வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.