“ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும்” - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு!
ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைப்போம் என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கான இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கூடும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவே ஆகும்.
எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கான வியூகங்கள், நாடாளுமன்ற குழுவிற்கான பொறுப்புகள் வழங்குவது, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
காங்கிரஸ் காரிய கமிட்டியில் பேசப்பட்டவை:
- ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை சென்ற இடங்களில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
- ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க வேண்டும்.
- கிராமப்புறம், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
- நகர்ப்புறங்களிலிலும் வாக்கு சதவீதம் அதிகரிக்க உழைக்க வேண்டும்.
- காங்கிரஸ் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும்.
- இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணம்.
- தேர்தல் பிரச்சாரத்தில் மக்களைத் தொந்தரவு செய்யும் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அவற்றை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து எழுப்புவோம்.