“விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்...அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” - என்.ஆனந்த் பேச்சு!
விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச் செயலாலர் என்.ஆனந்த் உதவிகளை செய்து, விழா மேடையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “இங்கு தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்றது. அதனால் ஊர்மக்களுக்கு எப்போதும் நன்றி உணர்வோடு தமிழக வெற்றிக் கழகம் இருக்கும். விஜய்யின் மாநாட்டிற்காக நிறைய பேர் இடம் கொடுத்தார்கள். மாநாட்டின் பார்கிங் வசதிக்கு 427 ஏக்கர் அளவு இடம் கொடுத்தார்கள். சிறிய உதவி செய்தாலும் கடைசி வரை மறக்க கூடாது என கட்சி தலைவர் வலியுறுத்தி வருகிறார்.
மூன்று மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய 18 லட்சம் ரூபாய் விஜய் வழங்கினார். அதனை கொடுத்த பிறகு போட்டோ எதுவும் எடுக்க கூடாதென கட்டளையிட்டவர் தான் விஜய். தாய்மார்கள் வயிற்றில் குழந்தைகள் இருக்கும்போதே விஜய்யின் பாட்டு கேட்டாலே அசைவு இருக்கும். 60 நபர்களுக்கு தினந்தோறும் ரத்தம் கொடுத்து கொண்டிருக்கும் கட்சியாக தவெக உள்ளது.
மக்கள் சந்தோசத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு தலைவர் விஜய் தான் காரணம். விஜய் பெயரை வைத்து கொண்டு சேவை செய்யும் கட்சியாக தவெக உள்ளது. கண்டிப்பாக 2026 தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் வருவார் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள். தவறு செய்பவர்கள் தவெகவில் இல்லை. அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது தவெக கட்சி துண்டினை போட்டு கொண்டு பிரச்சனை செய்வது டிரண்டாகி உள்ளது. அப்படி இருப்பவர்கள் பத்து நாட்களுக்கு முன்னர் தவெகவிற்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். அரசியல் பண்ணுவதற்கு தைரியம் தில் இருக்க வேண்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் அரசியல் செய்வோம். முன்னாடி இருந்து சந்திக்க வேண்டும் பின்னாடி இருந்து எதையும் குத்த கூடாது. எதைப்பற்றியும் யாரை பற்றியும் கவலைபடமாட்டோம்” என்று கூறினார்.