ஈரோடு | அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்த முதியவர் கைது!
ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்த முதியவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருக்கு சூரம்பட்டி எஸ்கேசி சாலை பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்ற ராஜா (64) என்பவர் அறிமுகமானார். இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தில் பொது மக்களுக்கு மனு எழுதி கொடுக்கும் பணியை செய்து வந்தார். வர்க்கீஸ் தனக்கு அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், அந்த பழக்கத்தின் மூலம் பலருக்கு சத்துணவு ஆசிரியர், அலுவலக எழுத்தர், அலுவலக உதவியாளர் என பல பணிகளை குறிப்பிட்ட தொகை பெற்று வாங்கி கொடுத்துள்ளேன் எனவும் கருப்பண்ணனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய கருப்பண்ணன் தன் மகனுக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தரக்கோரி கடந்த 2023ம் ஆண்டு 9 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், வர்க்கீஸ் கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருப்பண்ணன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஜவகரிடம் புகார் அளித்தார். இதையடுத்து இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கருப்பண்ணன் மட்டுமின்றி, இதேபோல் 6 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 19 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வர்க்கீஸ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருப்பூரில் பதுங்கியிருந்த வர்க்கீஸை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.