ஈரோடு இடைத்தேர்தல் - வெற்றி சான்றிதழை பெற்றார் திமுக வேட்பாளர் சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வந்தார். இறுதியாக திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று, 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24151 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். நோட்டா 6109 வாக்குகளை பெற்றது. திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுங்கரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் திமுக வேட்பாளர் சந்திரகுமாரிடம் வழங்கினர்.