For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை - பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடக்கம்!

06:30 AM Jul 25, 2024 IST | Web Editor
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை   பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடக்கம்
Advertisement

இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடங்க உள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.

இதையடுத்து ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில் ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டார். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜூலை 22 அன்று தொடங்கி வைத்தார்.  இந்த கலந்தாய்வு செப். 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொத்தம் உள்ள 661 இடங்களில் 70 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில், 48 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கான 38 இடங்களுக்கு தகுதியான 38 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 11 இடங்கள் உள்ளன. இதில், 7 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில், 6 பேருக்கு என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8 ஆயிரத்து 948 இடங்கள் உள்ளன. ஆனால். கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்களுக்கு 2 ஆயிரத்து 113 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள 143 இடங்களுக்கு ஆயிரத்து 243 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்கள் இன்று  காலை 10 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

Tags :
Advertisement