‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மோடியின் சாதனையை எடுத்து சொல்லும் விதமாக அமைந்தது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மோடியின் சாதனையை எடுத்து சொல்லும் விதமாக அமைந்தது” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பல்லடம் பகுதியில் நாளை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்டமான மாநாட்டில் பிரதமர் பங்கேற்கின்றார். இந்த யாத்திரை தமிழ்நாட்டில் திமுக அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்து சொல்லும் விதமாகவும், இயலாமையை எடுத்து சொல்லும் விதமாகவும், பிரதமரின் சாதனையை எடுத்து சொல்லும் விதமாகவும் அமைந்தது.
தமிழ்நாட்டில் ஊர்தோறும் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. திமுக நிர்வாகியே ரூ.3000 கோடி போதை பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டுள்ளார். போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் அவர்களுக்கு திமுக பாதுகாப்பாக இருக்கிறது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகி சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும். யார் இணைகின்றார்கள் என்பதை சிறிது நேரம் பொறுத்து இருந்து பாருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பொதுகூட்டத்தில் பங்கேற்கின்றனர்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.