For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SEBI தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்! மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

04:40 PM Sep 05, 2024 IST | Web Editor
 sebi தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்  மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
Advertisement

SEBI தலைவர் மாதபி புச்சை பதவி விலக வலியுறுத்தி மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் உள்ளதை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து SEBI அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை SEBI விசாரணையே போதுமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே அதானி ஊழலில் SEBI தலைவர் மாதபி புச்க்கும் பங்கு உள்ளதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் SEBI அமைப்பின் தலைவராக அரசு ஊதியம் பெற்று வரும் மாதபி புச், தனியார் வங்கியான ஐசிஐசிஐ-லும் ஊதியம் பெற்றுள்ளார் என்றும், ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவர் ரூ.16.80 கோடி ஊதியமாகப் பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், SEBI தலைவர் மாதபி புச் மீது SEBI ஊழியர்களே புகார்களை முன்வைத்து நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். SEBI அமைப்பின் கிரேடு ஏ மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள ஏராளமான அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து இந்த புகார்களை அனுப்பியுள்ளனர்.

அதில், பொது இடத்தில் அவமானப்படுத்துவதும் வகையில் கத்துவதும், திட்டுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற செயல்களில் மாதபி புச் ஈடுபடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எட்டமுடியாத இலக்குகளை நிர்ணயித்து, பின்னர் இலக்குகளையும் மாற்றிவிடுவதால் ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனை தொடர்ந்து, இன்று (05.09.2024) SEBI தலைவர் மாதபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி செபியின் மும்பை தலைமையகத்தில் செபி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மாதபி புச்சுக்கு எதிராக சுமார் 2 மணி நேரம் ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, செபி ஊழியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதோடு, உடனடியாக மாதபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags :
Advertisement