ஈரோடு முதிய தம்பதி கொலை - 3 பேரிடம் விசாரணை!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டு, பத்தரை சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த ஒன்றாம் தேதி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 12 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சுமார் 60 கிமீ சுற்றளவிற்கு சிசி டிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பல்லடம் கொலை வழக்கை போலவே நடந்திருப்பதால் திருப்பூர் போலீசாரும் இதில் தடயங்களை ஆராய்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 நபர்களை மாவட்டத்தின் புற நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட மூவரும் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் 6 க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.