“நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது - கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” - தவெக தலைவர் விஜய்!
நீட் தேர்விற்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமெனில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் நடத்தப்படும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கையை அசைத்தபடி நடிகர் விஜய் மேடை ஏறினார். சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜய்யின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழா மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “நீட் தேர்விற்கு நிரந்தரத் தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். இதில் சிக்கல்கள் இருந்தால், இடைக்கால தீர்வாக சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் என்ன பிரச்னை என்றால், பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அதில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது. எனவே மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்படவேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு நீட் தேர்வு வேண்டுமெனில் நடத்திக்கொள்ளலாம். இதுவே என்னுடைய பரிந்துரை” இவ்வாறு தெரிவித்தார்.