For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்வி விருது வழங்கும் விழா | சிறப்பு பிரிவில் விருது வென்ற மாணவிகள்!

11:39 AM Jul 03, 2024 IST | Web Editor
கல்வி விருது வழங்கும் விழா   சிறப்பு பிரிவில் விருது வென்ற மாணவிகள்
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் சிறப்பு பிரிவில் சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவிக்கும், புதுச்சேரியை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிக்கும் தவெக தலைவர் விஜய் பரிசுகள் வழங்கினார். 

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்  கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில் 800க்கும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து 10 மணி நேரம் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. மாணவ மாணவிகளுக்கு வைரத் தோடு , மாணவர்களுக்கு மோதிரம் பரிசாக வழங்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ இன்று (ஜூலை 3)  சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்குஇன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன. விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு காலை உணவும், விஜய்யின் படம் அச்சிடப்பட்ட பையில் பிஸ்கெட், ஜூஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து, மதிய விருந்துக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மண்டபத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இவ்விழா நடக்கும் இடத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் மாணவர்களின் மத்தியில் சென்று அமர்ந்தார்.  தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.  இதனையடுத்து மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் பின்னணியில் ஒலிக்க கையை அசைத்தபடி நடிகர் விஜய் மேடை ஏறினார்.  தொடர்ந்து விஜய் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்றும்  கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் பேசினார்.

பின்னர் 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செங்கல்பட்டைச் சேர்ந்த சுபிக்ஷா என்ற மாணவிக்கு சால்வை அணிவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து 12ம் வகுப்பு சிறப்பு பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதாவிற்கு பரிசு மற்றும் சான்றிதழை அவர் வழங்கினார்.

அந்த மாணவியுடன் வந்த அனுஸ்ரீ என்ற திருநங்கை பேசும் போது, "நான் தமிழ்நாட்டில் முதல் பொறியாளர் பட்டதாரி. டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி தேர்வாகிய நிலையில் என்னுடைய ஆர்டர்காக காத்துக் கொண்டுள்ளேன். அண்ணல் அம்பேத்கர் கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்று கூறியிருக்கிறார். கல்வியால் சிறந்தவர்களை ஒன்று சேர்த்து நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சிதான் புரட்சி. ஆண், பெண் என பிரிக்காமல் பாலின சமத்துவத்துக்கு மேடையாக இந்த நிகழ்வு திகழ்கிறது" என்றார்.

அடுத்ததாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பு பிரிவில் புதுச்சேரி காலாப்பேட்டையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி சண்முகப்பிரியாவிற்கு சால்வை அணிவித்து சான்றிதழை விஜய் வழங்கினார்.  பின்னர் சண்முகப்பிரியா தவெக தலைவர் விஜய்-ஐ பற்றி பேசினார். இதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Tags :
Advertisement